விலங்குகளின் திரிகால ஞானம்

விலங்குகளின் திரிகால ஞானம். திரிகால ஞானம் அனைத்து உயிரினங்களுக்கும் பிறவியிலேயே இருக்கும். உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு சுனாமி வந்தபோது, கடலில் இருந்து மீன்கள் எதுவும் கரைக்கு வரவில்லை. பல கோடி லிட்டர் கடல்நீர் நிலத்துக்கு வந்த போதும், கடல்வாழ் உயிரினங்கள் எதுவுமே நிலத்துக்கு வரவில்லையே ஏன்? சுனாமி வருவதற்கு முன் சில நாட்களாக மீனவர்களுக்கு வலைகளில் மீன்கள் மிகக் குறைவாகவே கிடைத்தன என்றார்கள்.

அலைகள் உயரமாக எழுந்து கரைக்குச் செல்லப்போகிறது, கரையோரம் இருந்தால் நாமும் கரைக்குச் சென்றுவிடுவோம் என்பது கரையோரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உயிரினங்களுக்கு தெரிந்து அவை ஆழ்கடலுக்குள் சென்றுவிட்டன. கடல்வாழ் உயிரினங்களுக்கு பூமியில் நடக்கவிருக்கும் விசயங்கள் முன்கூட்டியே தெரிகின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு அத்தாட்சி.

காடுகளில் வாழும் விலங்குகளுக்கு வறட்சிக் காலம் வரப்போவது முன்கூட்டியே தெரிகிறது. மழை பெய்யப்போவது முன்கூட்டியே தெரிகிறது. காலப் பருவ மாற்றங்கள் நிகழப்போவதும் முன்கூட்டியே தெரிகிறது. அதைப்போல் சுனாமி வந்த பொழுது காடுகளில் வாழ்ந்த விலங்குகள் செத்ததாக ஒரு செய்திக் கூட நமக்கு எட்டவில்லை. மனிதர்கள் அடைத்து அல்லது கட்டி வைத்து வளர்த்த விலங்குகள் மட்டுமே இறந்தன. மற்றபடி காடுகளில் இயற்கையோடு வாழ்ந்த எந்த விலங்குகளும் மரணிக்கவில்லை. அனைத்து விலங்குகளும் சுனாமி வருவதை முன்கூட்டியே அறிந்து கடலிலிருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டன.

இன்றும் கூட நம் கிராமங்களில் விலங்குகளைப் பார்த்தும், பறவைகளைப் பார்த்தும், சில விசயங்களைக் கணிப்பார்கள், அவற்றை சகுனம் என்பார்கள். இவற்றையெல்லாம் நாம் மூடநம்பிக்கைகள் என்று சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் விலங்குகளுக்குள் திரிகால ஞானம் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை அறிந்த நம் முன்னோர்கள் அந்த சக்தியைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

திரிகால ஞானம் அனைவருக்கும் இருக்கும் என்று சொன்னீர்களே அது எங்களுக்கும் இருக்குமா? என்றால் ஆம்! உங்களுக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் அது எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்வதானால், ஒரு பக்கவாதம் வந்த நபருக்கு இருக்கும் கை கால்களைப் போன்று இருக்கும். இருக்கும் ஆனால் அது முழுமையாக செயல்படாது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனமும் நம் முன்னோர்களும் திரிகால ஞானத்தை நம்பாததாலும், பயன்படுத் தாததாலும் அவர்களின் வாரிசுகளான நமக்கு அந்த ஆற்றல் உயிர்ப்போடு இருக்காது.

ஆனாலும் நம்முடைய மரபணுவில் எதிர்கால ஞானத்தின் கோட்பாடுகளும்,அவற்றின் ஆற்றல்களும் நிச்சயமாக இருக்கும். உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் மாற்றி யோகா, தியானம். மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டால், திரிகால ஞானத்தை அடைவது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றுதான்.

Leave feedback about this

  • Rating