தீய எண்ணங்கள் உருவாகாமல் தடுப்பதற்கு.இவ்வுலகில் வாழும் அத்தனை மனிதர்களுக்கும் ஏதாவது ஒருவகையில் தீய சிந்தனைகளும், தீய எண்ணங்களும், உருவாவதைத் தவிர்க்க முடியாது. ஆண்டி முதல் அரசன் வரையில், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில், யாரும் விதிவிலக்கல்ல. ஒரு மனிதன் எந்த வயதில், எந்த நிலையில், எந்த சூழ்நிலையில், இருந்தாலும் அவன் மனதின் பக்குவ நிலைக்கு ஏற்ப தீய எண்ணங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
மனிதர்களுக்கு நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் மாறி மாறி உருவாக்குவது இயற்கையான இயல்புதான், இதில் எந்த தவறும் கிடையாது. குறிப்பாகச் சொல்லப்போனால் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு, அந்த எண்ணங்கள் தோன்றும் மனிதன் காரணமில்லை. தன்னை அறியாமலேயே ஒருவர் மனதில் பல வகையான எண்ணங்கள் தோன்றி மறையலாம்.
ஒருவர் மனதில் எவ்வாறான எண்ணங்கள் தோன்ற வேண்டும்? ஒரு சூழ்நிலையில் எவ்வாறான எண்ணங்கள் தோன்ற வேண்டும்? என்பதை யாராலும் தேர்ந்தெடுக்க முடியாது. எண்ணங்களை, “தோற்றம்” என்ற வார்த்தையில் குறிப்பிடும் போதே, அவை சுயமாக “தோன்றுபவை” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுயமாக உருவாக்கும் ஒரு விசயத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது அல்லவா?
மனிதர்களின் மனதில் பதிவாகி இருக்கும் பதிவுகளை வைத்தும், இப்போது அவர்கள் பார்த்து, கேட்டு, அனுபவித்துக் கொண்டிருக்கும் விசயங்களை வைத்தும்; அவர்களின் மனதில் நல்லதாகவோ, தீயதாகவோ, எண்ணங்கள் உருவாகின்றன. எண்ணங்கள் தோன்றுவது நம் மனதில், அந்த எண்ணங்களால் உண்டாகும் பாதிப்புகளை அனுபவிப்பது நாம், இருந்தாலும் எண்ணங்கள் தோன்றுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
தேவையற்ற எண்ணங்களில் இருந்து விடுபடும் வழிமுறைகள்.
மனதில் இருக்கும் பதிவுகளின் அடிப்படையிலேயே எண்ணங்கள் தோன்றுகின்றன, அதனால் நல்ல விசயங்களை, பார்த்து, கேட்டு, வாசித்து, மனதில் பயனுள்ள பதிவுகளை உருவாக்கிக் கொண்டால்; மனதில் தோன்றும் எண்ணங்களும் பயனுள்ளவையாக இருக்கும்.
மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள, நான் வேறு – என் மனம் வேறு, என்ற தெளிவான புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த தெளிவு உருவானால் மனதில் தோன்றும் எந்த எண்ணமும் சிந்தனையும் உங்களை எந்த வகையிலும் பாதிக்காது.
மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் தோன்றும் எண்ணங்களுக்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றப் போகிறீர்கள் என்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
Leave feedback about this